தமிழ் சினிமாவில் சமீபத்தில் சிறு பட்ஜெட்டில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் பாமிலி’. குடும்பம், பயணம், நகைச்சுவை, உணர்ச்சி எனப் பல பரிமாணங்களைத் தொகுத்து வழங்கிய இந்தப் படம், வெளியான சில நாட்களுக்குள் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்தப் படத்தின் இயக்குநராக மக்கள் மனங்களை வென்றவர் அபிஷன் ஜீவிந்த். இளம் வயதிலேயே இயக்குநராக பரிச்சயமான இவர், தற்போது மிகப்பெரிய கனவுகளுடன் சினிமாவில் அடிக்கல் போட்டுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான பாராட்டை நேரடியாக இந்தியாவின் மாபெரும் இயக்குநராக திகழும் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்தில் வழங்கியிருந்தார்.
‘RRR’, ‘பாகுபலி’ போன்ற உலகளாவிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜமௌலி, சமீபத்தில் ‘டூரிஸ்ட் பாமிலி’ படம் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு சிறந்த பாராட்டைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர், “ஒரு குடும்பத்தை கொண்டு அற்புதமான சினிமா அனுபவம் கொடுக்க முடியும் என்பதற்கு 'டூரிஸ்ட் பாமிலி' ஒரு சரியான எடுத்துக்காட்டு. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நம்மை உணரச் செய்கிறது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்துக்கு வாழ்த்துகள்!” என்று பதிவிட்டிருந்தார்.
இதுதான் அபிஷனை சினிமாவில் ஒரு முன்னணி இயக்குநராக மாற்றும் முதல் பரிசு என்று பலரும் கருதுகின்றார்கள். ராஜமௌலியின் பாராட்டைப் பெற்றதையடுத்து, இயக்குநர் அபிஷன் தனது X தளப் பக்கத்தில், தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது, “இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. ராஜமௌலியின் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் நடித்ததை நான் பார்த்திருக்கின்றேன். அவரை நாம் வீரக் கதைகள் சொல்லும் ஜாம்பவான் இயக்குநராகவே பார்த்திருக்கிறோம். ஒரு நாள் அந்த உலகங்களை உருவாக்கியவர் என் பெயரை உச்சரிப்பார், என்று கனவில் கூட நினைக்கவில்லை. ராஜமௌலி சார் இந்தச் சிறுவனின் கனவை வாழ்க்கையை விடப் பெரிதாக்கிவிட்டீர்கள்..!" என்று தெரிவித்தார் அபிஷன். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!