சமூகத்தில் சில மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், நம்மை கலங்க வைக்கின்ற நிலைக்கு கொண்டு போகின்றன. அதே சமயத்தில், சிலர் அத்தகைய மனிதர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்து அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறார்கள். அத்தகைய மனிதராக தற்பொழுது விளங்குபவரே நடிகர் ராகவா லாரன்ஸ்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகேயுள்ள சுக்கனாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் குமார் - முத்துக்கருப்பி தம்பதியினர், கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்திவருபவர்கள். அவர்கள் தனது மகளின் காதணி விழாவை கோலாகலமாக செய்ய வேண்டும் என்ற கனவில் நீண்ட நாட்களாக இருந்தனர்.
அதற்காக முத்துக்கருப்பி, பல ஆண்டுகளாக பணங்களை சேமித்து வந்தார். அந்தப் பணத்தை, ஒரு தகரப்பெட்டியில் வைத்து, வீட்டில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார். ஏனெனில் வங்கிக்கு போவதற்கான வசதி அவர்களுக்கு இல்லை என்பதனால் அந்தப் பெட்டியை குழி தோண்டிப் பாதுகாத்து வந்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு, முத்துக்கருப்பி மகளின் விழாவுக்கான செலவுகளை திட்டமிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்போது அவர் அந்த பெட்டியைத் திறந்து பணத்தைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்து கொண்டார்.
மழை பெய்ததால் கறையான்கள் அந்த பெட்டிக்குள் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை முழுமையாக அரித்திருந்தன. ஒரு நிமிடத்தில், பல ஆண்டுகளாக சேமித்த 1 லட்சம் ரூபாய் கனவுகள் அழிந்துவிட்டன. முத்துக்கருப்பி கண்ணீர் விட்டுக் கதறினார். உறவினர்கள், ஊர் மக்கள் அந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இந்த சம்பவம் இணையத்தில் பரவியதையடுத்து, அதை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் மிகவும் கவலைப்பட்டார். உடனடியாக குமார் – முத்துக்கருப்பி தம்பதியரிடம் தொடர்பு கொண்டு, அவர்களை வரவழைத்து 1 லட்சம் ரூபாவைக் கொடுத்திருந்தார். அதை பார்த்த அந்த தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கொண்டனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!