தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயது.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி திரையுலகினரையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1977-ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார். கிராமத்து வாழ்க்கை, மனித உணர்வுகள் மற்றும் இயற்கையோடு இணைந்த கதைகளின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான திரைப்பட பாணியை உருவாக்கினார்.
கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, மண் வாசனை, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத படைப்புகளாக இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் பல திரைப்படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக, சமீப காலங்களில் அவர் நடித்த குணச்சித்திர வேடங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
தமிழ் சினிமாவுக்கு பல புதிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் பாரதிராஜாவையே சேரும். அவரது படைப்புகள் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை வெள்ளித்திரையில் உணர்வுபூர்வமாக பதிவு செய்தன.
பத்மஸ்ரீ விருது, ஆறு தேசிய விருதுகள் மற்றும் தமிழக அரசின் உயரிய கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களை பெற்ற பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
இயக்குநர் இமயம் என ரசிகர்களால் போற்றப்பட்ட பாரதிராஜா, தனது திரைப்படங்கள் மற்றும் கலைப் பங்களிப்புகள் மூலம் என்றும் தமிழ் சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்பார்.
Listen News!