தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் பாரதிராஜா, தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் தொடர்ந்து உடல்நிலையை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1977-ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து அவர் உருவாக்கிய அந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக கருதப்படுகிறது.

கிராமிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்த பாரதிராஜா, பல புதிய திறமைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவராகவும் அறியப்படுகிறார். ராதிகா சரத்குமார், ராதா உள்ளிட்ட நடிகைகளின் வளர்ச்சியிலும், பல கலைஞர்களின் திரைப்பயணத்திலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை போன்ற பல திரைப்படங்கள் இன்று வரை தமிழ் சினிமாவின் முக்கிய படைப்புகளாக பேசப்பட்டு வருகின்றன. இயக்குநராக மட்டுமின்றி, சமீப காலங்களில் நடிகராகவும் பல படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர், தமிழ் சினிமாவின் அனுபவம் மிக்க படைப்பாளிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது அவரது உடல்நிலை குறித்த தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் மீண்டு மீண்டும் தனது கலைப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!