ஒரு சாதாரண குடும்ப மனிதனின் கதையாக தொடங்கி, உலகம் முழுவதும் ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைத்த திரைப்படம் தான் திரிஷ்யம்.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மற்றும் மீனா நடித்த “திரிஷ்யம்” முதல் பாகம் 2013-ல் வெளியாகி இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்தது. வெறும் ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம், ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டுமல்லாமல் சீன மொழியிலும் படம் ரீமேக் செய்யப்பட்டு உலகளவில் கவனம் பெற்றது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்பின் வெளியான “திரிஷ்யம் 2” ஓடிடி தளத்தில் வெளியாகியும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. முதல் பாகத்தை விட அதிக சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களால் அந்த படம் பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள “திரிஷ்யம் 3” மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை வேட்டை நடத்தி வருகிறது. கடந்த 21ஆம் தேதி வெளியான இந்த படம், முதல் நாளிலேயே ரூ.50.35 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல், வெறும் 58 மணி நேரத்திலேயே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
எம்புரான் படத்திற்கு பிறகு மிக வேகமாக 100 கோடி வசூலை கடந்த மலையாள படமாக “திரிஷ்யம் 3” மாறியுள்ளது. இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படங்களில் ஒன்றாக இது உருவெடுக்கும் என திரையுலகில் பேசப்படுகிறது.
Listen News!