சமீபத்தில் சிவகுமார் சென்னையில் நடைபெற்ற ஒரு உணவக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. எப்போதும் வாழ்க்கை அனுபவங்களையும், நேர்மையான சிந்தனைகளையும் பகிர்ந்து வருபவர் என்ற பெயரை பெற்றுள்ள அவர், இந்த முறை கூறிய வார்த்தைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் தனது உரையில், “வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொண்டு வாழ்வது தவறு. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கிறது.” என்று கூறினார்.
இந்த கருத்து, இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடக காலத்தில் ஒப்பீடு அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த அறிவுரை பலருக்கும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, நடிகர்கள் மற்றும் அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதிக விவாதத்தை கிளப்பியுள்ளன. “நடிகர் நாட்டை ஆளலாம் என்று உலகத்திற்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். அவரைப் போன்றவர் மீண்டும் பிறப்பது கடினம்.” என்று அவர் தெரிவித்தார். தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்த எம்.ஜி.ஆரின் சாதனைகளை அவர் நினைவுகூர்ந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், “உலகத்திலேயே மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசன் கூட அரசியலில் வெற்றி பெற முடியவில்லை” என்று அவர் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமாவில் உயர்ந்த சாதனைகள் இருந்தாலும், அரசியல் என்பது முற்றிலும் வேறுபட்ட தளம் என்பதை அவர் சுட்டிக்காட்டியதாக சிலர் கருதுகின்றனர்.
இதேவேளை, “எல்லாம் தெரியும் என்று நினைக்கும் மனிதன் யாரும் இல்லை. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள்.” என்ற அவரது இறுதி அறிவுரையும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
Listen News!