• Apr 18 2026

என்னுடைய வாழ்க்கையையே திரையில் பார்த்தேன்.. "பைசன்" படத்தால் நெகிழ்ச்சியடைந்த கபடி வீரர்!

shali / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா இப்போது சமூக கருத்துக்களையும், உணர்வுகளையும் நேர்மையாகப் பேசும் ஒரு புதிய பரிணாமத்தை நோக்கி நகர்கிறது. அதற்கு முக்கிய காரணியாக மாறிய இயக்குநர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். பரியேரும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு பிறகு, அவரது மூன்றாவது திரைப்படமான "பைசன்" (Bison) கடந்த அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அதன் கதையின் நாயகனாக வாழ்ந்த ஒருவரின் மனதையும் தொட்டிருக்கிறது.


பைசன் படம், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய அளவிலான கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இவர் கபடி விளையாடும் போது எதிர்கொண்ட பிரச்சனைகளையே மாரி செல்வராஜ் தற்பொழுது படமாக எடுத்துள்ளார்.

மணத்தி கணேசன் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர் சந்தித்த மன அழுத்தங்கள், அரசியல் சிக்கல்கள் ஆகியவற்றையும் இந்த திரைப்படத்தின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


இப்படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு பெரும்பாலான விமர்சகர்களிடம் பாராட்டுக்கள் குவிந்தன. ஒரு சாதாரண கிராமத்து வீரனின் மனநிலை, உற்சாகம் ஆகியவற்றை மாரி செல்வராஜ் மிக நுணுக்கமாக சித்தரித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகிய படங்களில் Bison தனிச்சிறப்புடன் நிற்பதற்கு காரணம் அப்படத்திற்குள் உள்ள உண்மைச் செய்திகள் மற்றும் உணர்வுகளால் தான். திரைப்படத்தில் கபடி விளையாட்டின் அடிப்படை ஆழம், சாதிப் பின்னணி போன்றவை உண்மையாக பேசப்படுகின்றன.

திரைப்படத்தை பார்த்த பிறகு, அவரது உணர்வுகளை வெளிப்படுத்திய மணத்தி கணேசன், "சிறுவயதில் நான் பட்ட கஷ்டத்தை திரையில் பார்க்கும் போது, கண்கள் கலங்கி விட்டது. அதே நேரத்தில், ஒரு விதமான ஆனந்தமும் ஏற்பட்டது. அர்ஜுனா விருது வாங்கும் பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இந்த படத்தை பார்த்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இதற்கெல்லாம் ஒரே காரணம் மாரி செல்வராஜ் தான்." என்று கூறியுள்ளார்.

இது போல ஒரு வீரரின் வாயிலாக கிடைக்கும் பாராட்டு, வெறும் பாராட்டாக இல்லாமல், படம் எவ்வளவு உண்மையை பேசுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement