ரம்யா ரங்கநாதனின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ளார். படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் வெற்றி குறித்து கதாநாயகி ரம்யா ரங்கநாதன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "'அன்பே டயானா' திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு நல்ல குழுவுடன் இணைந்து பணியாற்றும்போது வெற்றியும், மகிழ்ச்சியும் தானாகவே வந்து சேரும். அந்த வகையில் இந்தப் படத்தின் வெற்றி எங்கள் முழுக் குழுவினரின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்" என்றார்.

மேலும், "ஒரு கலைஞனுக்கு ரசிகர்களின் கைத்தட்டலே மிகப்பெரிய விருது. நம்முடைய சொந்தப் பெயரால் அழைப்பதை விட, நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரால் ரசிகர்கள் அழைப்பதுதான் உண்மையான அங்கீகாரம். இந்தப் படத்தில் நான் நடித்த 'மேஜிக்' என்ற கதாபாத்திரத்தின் பெயரால் பலரும் என்னை அழைக்கத் தொடங்கியுள்ளனர். அது எனது வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய மேஜிக் என்று சொல்லலாம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, "படத்தை பார்த்த பலரும் என்னை நிஜத்திலேயே ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் என்று நினைத்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் மக்களிடம் சென்று சேர்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நடிகையாக எனக்கென ஒரு தனி அடையாளத்தை இந்தப் படம் உருவாக்கிக் கொடுத்துள்ளது என்ற உணர்வு இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
'அன்பே டயானா' திரைப்படத்தின் வெற்றி மட்டுமின்றி, அதில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பது, ரம்யா ரங்கநாதனின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் இந்த வரவேற்பு, அவரது அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
Listen News!