தமிழ் இலக்கியமும், திரையுலக பாடல்களும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்திருக்கின்ற சூழலில், கவிஞர் வைரமுத்து என்பவர் தனி வரலாறு. நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்கள், அற்புதமான கவிதை, இலக்கியத்தின் நவீன நயங்கள் எனப் பல பரிமாணங்களில் திகழும் அவர், சமீபத்தில் ஒரு உணர்வுபூர்வமான குறை கூறியுள்ளார்.
தன் பல்லவிகள் பலவற்றை தமிழ் திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் திரைப்பட தலைப்புகளாக உபயோகித்து விட்டதாகவும், அந்த நேரத்தில் யாரும் அனுமதி பெறவில்லை, மரியாதைக்கு கூட கேட்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அவர் சொன்னதாவது, “என்னுடைய பல்லவிகள் பலவற்றை தமிழ் திரையுலகம் திரைப்படத் தலைப்புகளாக பயன்படுத்தியிருக்கிறது. அப்படி எடுத்தவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை. மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. சொல்லாமல் எடுத்துக்கொண்டதற்காக நான் அவர்களை கண்டித்ததும் இல்லை. காணும் இடங்களில் கேட்டதும் இல்லை. ‘ஏன் என்னை கேட்காமல் செய்தீர்கள்?’ என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்றார்.
வைரமுத்துவின் எழுத்துப் பாணி மிக நேர்த்தியானதோடு, மனதை கவரும் சொற்பொழிவுகளால் நிறைந்துள்ளது. இவரது பல்லவிகள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கவிஞர் வைரமுத்துவின் இந்த உரை ஒரு தனிப்பட்ட கலைஞரின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Listen News!