• Jul 30 2026

ஒரே படத்திற்கு 3 கிளைமாக்ஸ்... சூர்யாவே தேர்வு செய்த இறுதி முடிவு!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி பகிர்ந்துள்ள புதிய தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சிக்காக ஒரே ஒரு முடிவை மட்டும் எழுதவில்லை என்றும், மொத்தம் மூன்று வெவ்வேறு கிளைமாக்ஸ் காட்சிகளை தயாரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று திரைக்கதை பதிப்புகளையும் நடிகர் சூர்யாவிடம் கொடுத்து, உங்களுக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றும் கிளைமாக்ஸை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியில் சூர்யா தேர்வு செய்த கிளைமாக்ஸே தற்போது திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் இந்த புதிய முயற்சி, படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளதுடன், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், நவின் நூலி படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

குடும்ப உணர்வுகளும், வலுவான கதைக்களமும் இணைந்ததாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், மூன்று கிளைமாக்ஸ்களில் சூர்யா எதைத் தேர்வு செய்தார்? என்ற கேள்வியே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement