தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படைப்புகளாலும், வெளிப்படையான பேச்சுகளாலும் எப்போதும் கவனத்தை ஈர்க்கும் இயக்குனர் மிஷ்கின், தற்போது இயக்குனர் சசி குறித்து பேசியுள்ள உணர்ச்சிகரமான கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னையில் நடைபெற்ற ‘நூறு சாமிகள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட அவர், சசி தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மனிதர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சினிமாவில் உண்மையான நல்ல மனிதர்கள் மிகவும் குறைவு என்றும், தனது 30 ஆண்டுகால பயணத்தில் மாதந்தோறும் தொடர்பில் இருந்து அன்பாக விசாரித்து, எப்போதும் தன்னை உயர்வாகப் பேசும் ஒரே நபர் சசி தான் என்றும் மிஷ்கின் கூறினார். “நேஷனல் அவார்டு வாங்கலாம், பல சாதனைகள் செய்யலாம்; ஆனால் மனிதநேயம் கொண்ட சசி போன்றவர்கள் அரிது” என்று அவர் பாராட்டினார்.
மேலும், ‘நூறு சாமிகள்’ படத்தின் கதையை முதலில் தனது உதவியாளர்களிடம் கூறிய சசியின் தன்னம்பிக்கை மற்றும் ஈகோ இல்லாத பண்பை மிஷ்கின் சிறப்பாக குறிப்பிட்டார். ஒரு இயக்குனர் தனது உதவியாளர்களை நம்பி கதையை பகிர்வது மிகவும் அபூர்வமான விஷயம் என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தனக்கு அதிகமாக படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லை என்றும், மோசமான படம் பார்த்தால் விரக்தி ஏற்படும், ஆனால் நல்ல படம் பார்த்தால் பல படங்களை இயக்கும் உற்சாகம் கிடைக்கும் என்றும் கூறிய மிஷ்கின், ‘நூறு சாமிகள்’ திரைப்படம் தன்னுள் அப்படிப்பட்ட பெரிய உத்வேகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
Listen News!