பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஓய்வு மற்றும் உழைப்பு குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தனது தொழில் வாழ்க்கையில் கடந்த பல தசாப்தங்களாக கடுமையாக உழைத்து வரும் அவர், "ஓய்வு" என்ற வார்த்தையையே தான் நம்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், "ஒரு மனிதன் இறப்பதற்கு ஐந்து வினாடிகள் முன்பு தான் உண்மையான ஓய்வை எடுக்க வேண்டும். நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ விரும்பினால், ஓய்வைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்." என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு நாளும் காலை எழும்போது "இன்று ஓய்வு எடுத்துவிடலாமா?" என்ற எண்ணம் சில நொடிகள் தோன்றும் என்றும், ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தன்னை நம்பி காத்திருக்கும் நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நினைத்தவுடன் அந்த எண்ணம் மறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 36 ஆண்டுகளாக இதே மனநிலையுடனும் அர்ப்பணிப்புடனும் தனது பணியை மேற்கொண்டு வருவதாக கூறிய அக்ஷய் குமார், கடின உழைப்பே தனது வெற்றியின் முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பலர் அதை ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பாடமாக பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!