நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சமூக வலைதளப் பதிவில் அவர், “நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இன்று காலை 10 மணிக்கு வீடியோ மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. ராகவா லாரன்ஸ் நேரடியாக அரசியலுக்குள் களமிறங்கப் போகிறாரா? அல்லது சமூக நலன் சார்ந்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை அறிவிக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
குறிப்பாக பல ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு உதவி செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவிகள் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ், தற்போது எடுத்துள்ள இந்த முடிவு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அவரது வீடியோ அறிவிப்பில் என்ன வெளியாகப் போகிறது என்பது குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசியல் கட்சி தொடங்குவது முதல் ஏற்கனவே உள்ள அரசியல் இயக்கத்துடன் இணைவது வரை பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. லாரன்ஸின் இந்த திடீர் அறிவிப்பு தமிழ்நாடு அரசியல் மற்றும் திரையுலகில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!