தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக தனது 84 வது வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு மகன் மனோஜின் மறைவு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த துயரிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த செய்தி வெளியாகியதையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது அன்பையும் மரியாதையையும் செலுத்தினர்.

இந்த நிலையில், பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த மண்ணான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அவரது பண்ணை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகிற்கு எண்ணற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கு, முழு அரசு மரியாதையுடன் நாளை மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. தனது படங்களில் மண்ணின் மணத்தையும் மனித உணர்வுகளையும் உயிரோட்டமாக பதிவு செய்த கலைஞன், இன்று அதே சொந்த மண்ணில் நிரந்தர உறக்கத்திற்கு செல்ல உள்ளார் என்பதே அவரது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!