இந்திய திரையுலகிலும், மோட்டார் ரேஸிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித் குமார், தற்பொழுது நாடு முழுவதும் பெருமையைப் பெற்றுள்ளார். சமீபத்தில், இவரது சாதனைகளுக்கு அங்கீகாரமாக இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மபூஷன் விருதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களின் கையால் வழங்கப்பட்டிருந்தது. இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களிடையே பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியது.
திரைப்படம் மற்றும் கார் பந்தயத்துறையில் சிறந்து விளங்கும் அஜித் குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்று பெருமைபெற்ற அஜித், தனது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினருடன் டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்டார். ஜனாதிபதியின் கையால் நேரில் விருது பெற்ற அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அவர் விமான நிலையம் வந்த தருணத்தில் அவரது காரை நோக்கி செல்லும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், அதில் அஜித்தின் காலில் சிறிய அளவில் அடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வட்டாரத் தகவலின்படி, அவருடைய காலில் ஏற்பட்ட சின்ன நோவுக்காக பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.
பத்மபூஷன் விருதால் பெருமை பெற்ற நடிகர் அஜித், தற்போது தனது உடல்நலக் குறைபாட்டிற்காக சிகிச்சையில் உள்ளார் என்றாலும், அவர் விரைவில் பூரண நலத்துடன் திரும்புவார் என்பதில் அவரது ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.
Listen News!