நடிகர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம் தொடர்பாக மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட மேலும் இருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதன் காட்சிகள் மற்றும் முழுப் படம் சமூக வலைத்தளங்கள், டெலிகிராம் சேனல்கள் மற்றும் சில இணைய தளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் துறையினருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வது, பகிர்வது அல்லது சமூக வலைத்தளங்களில் பரப்புவது கடுமையான குற்றம் என்றும், இதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு டி.ஜி.பி., திரைப்பட கசிவில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் திரையுலகில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!