திரையரங்கு உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் பேசிய கருத்துகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நடிகர் சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படத்தின் வெளியீட்டை எடுத்துக்காட்டாக கூறிய அவர், ஒரு பெரிய படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அவரது பேச்சில், 'கருப்பு' திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டிய நிலையில் பல்வேறு காரணங்களால் சுமார் எட்டு மாதங்கள் தாமதமாகி தற்போது தான் திரைக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஒரு படம் வெளியாகும் இறுதி நாட்களில் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது என்றும், குறிப்பாக ரிலீஸுக்கு முந்தைய இரண்டு நாட்கள் மிகுந்த பதற்றத்துடன் கடந்து செல்லும் என்றும் கூறினார்.
மேலும், படம் சிக்கலில் இருக்கும் நேரத்தில் நடிகர் சூர்யாவைத் தவிர வேறு யாரும் தயாரிப்பாளர்களுக்கு துணையாக நிற்பதில்லை என அவர் தெரிவித்தார். ஆனால் படம் வெற்றிகரமாக வெளியாகி வசூல் சாதனை படைத்தவுடன், சில இயக்குநர்கள் அல்லது படக்குழுவினர் அந்த வெற்றிக்கு தாங்களே முழு காரணம் என்ற வகையில் பேசத் தொடங்கிவிடுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் மறைமுக சவால்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக சிலர் ஆதரவு தெரிவிக்க, மற்றொரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!