விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பங்கேற்ற 24 போட்டியாளர்களில் ஒருவராக விஜே பார்வதி கலந்து கொண்டு, தன்னுடைய திறமையாலும் தனித்துவமான நடத்தைமுறையாலும் கவனத்தை ஈர்த்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே இறுதி வரை சென்று வெற்றி பெறக்கூடிய போட்டியாளர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.
நிகழ்ச்சியின் 13வது வாரத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஒரு முக்கியமான போட்டியாக, காருக்குள் நீண்ட நேரம் தாங்கி நிற்கும் சவால் இடம்பெற்றது. இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த போட்டியின் போது விதிமுறைகளை மீறிய நடத்தை காரணமாக விஜே பார்வதி மற்றும் போட்டியாளர் கமருதீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, நடிகை சாண்ட்ராவை மனிதாபிமானமற்ற முறையில் காரில் இருந்து உதைத்து வெளியேற்றியதாகவும், தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி விதிகளின் அடிப்படையில் இருவருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு திடீர் வெளியேற்றம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பரவலான விவாதங்கள் நடைபெற்றன. இருப்பினும், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த விஜே பார்வதிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து, விஜே பார்வதி தனது அடுத்த கட்ட பயணமாக ‘காட்டான்’ என்ற வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு விஜே பார்வதி அளித்த பேட்டியில், அந்த கார் டாஸ்கில் அப்படி நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், ஒருவேளை இறுதிவரை சென்று வெற்றி பெற்றிருக்கலாம் என மனம் திறந்து கூறியுள்ளார்.
மேலும், “அது அஷ்டமசனி போல… என்ன பண்றது ?” என கலகலப்பாக அவர் பேசியுள்ளார். தற்போது அவருடைய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!