தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் சமீப காலமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக, விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான உறவு குறித்து கடந்த சில வாரங்களாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி வருகின்றன.

கடந்த மாதம் 27ஆம் தேதி, நடிகர் விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த மனுவில், தங்களது குடும்ப வாழ்க்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன்வைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதம் கிளம்பியது.
இந்த நிலையில், தற்போது சங்கீதா மேலும் ஒரு புதிய மனுவை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மனுவில், தன்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கீதா தனது மனுவில் கூறியதாவது, தாம் விவாகரத்து வழக்கு தொடர்ந்த பிறகு நீலாங்கரை இல்லத்திற்குள் தன்னை அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தற்போது சென்னையில் தங்குவதற்கான இடமின்றி சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அந்த வழக்கு முடிவடையும் வரை தற்காலிகமாக நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் சங்கீதா தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கு முடிவடைந்து தனியாக வேறு வீடு ஏற்பாடு செய்யும் வரை அந்த இல்லத்தில் தங்குவதற்கான அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அதோடு, நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கான அனுமதி குறித்து கேட்கும் போது விஜய் தரப்பிலிருந்து வழக்கறிஞர் மூலமாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டு தற்போது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் அல்லது அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் மேலும் முக்கிய திருப்பத்தை எடுக்கலாம் என்று சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.
Listen News!