தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், சமீபத்தில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்திற்காக கோவையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையமாகக் கொண்டு அதிக பொருட்செலவில் உருவான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது, ராம் சரணின் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பரிசோதனையின் பின்னர் அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து, அவர் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாள் நடைபெற்ற சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு ராம் சரண் நலமுடன் இருப்பதாகவும், இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!