தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் உறைந்த நட்சத்திரமாகத் திகழும் நடிகர் சூர்யா, தற்போது தனது 45வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கின்றார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்தக் கூட்டணிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் வெற்றி பெற்ற இயக்குநர் வெங்கி அட்லூரி, தற்போது சூர்யாவுடன் இணைந்து அவரது 46வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் சூர்யாவின் மாநில எல்லைகளை கடந்த மாறுபட்ட படங்களில் ஒன்றாக இது உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. தற்போது ‘சூர்யா 46’ என்ற தற்காலிக தலைப்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருப்பவர், மலையாள சினிமா மூலம் அறிமுகமான மமிதா பைஜு.
‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்குவதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் எளிமையான முறையில், படத்தின் திரைக்கதையை வைத்து வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து,படக்குழு இன்று வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, ‘சூர்யா 46’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 9ம் திகதி முதல் தொடங்கவுள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
Listen News!