• Jul 21 2026

'பாகுபலி 3' கன்பார்மா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய திரைப்படமாக அமைந்தது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த இந்த பிரமாண்ட வரலாற்றுப் புனைவு படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.


இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி 2' முதல் பாகத்தை விட பெரிய வெற்றியைப் பெற்று இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியது. பின்னர் 2025-ல் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி – தி எபிக்' என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், 'பாகுபலி' திரைப்படத்தின் உருவாக்கப் பயணம், படப்பிடிப்பில் சந்தித்த சவால்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அனுபவங்கள் ஆகியவற்றை பதிவு செய்யும் 'பாகுபலி – தி டார்ச்பியரர்' என்ற ஆவணத் தொடர் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணத் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "உலகம் இன்னும் அதற்கு தயாராகவில்லை. ஆனால் பாகுபலி..." என்று ராணா டகுபதி சஸ்பென்ஸ் வைக்க, உடனே பிரபாஸ் சிரித்தபடி தனது கையில் மூன்று விரல்களை உயர்த்துகிறார். அதனை அனுஷ்கா ஷெட்டியும் ராணாவும் சிரித்தபடி தடுக்க முயற்சிக்கும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த மூன்று விரல் சைகை 'பாகுபலி 3' குறித்த மறைமுக சுட்டிக்காட்டாக இருக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ராஜமௌலி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார். அந்த படம் நிறைவடைந்த பிறகே 'பாகுபலி 3' குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement