தளபதி விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் நடித்த கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', தியேட்டரில் வெளியாகும் முன்பே கசிந்துவிட்ட போதிலும், பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து மிரட்டலான வசூலை குவித்து வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே வலுவான ஓப்பனிங்கை பதிவு செய்தது.

தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாயை கடந்துள்ள 'ஜன நாயகன்', ஏழாவது நாளிலும் சுமார் 5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தினசரி 5 முதல் 7 கோடி ரூபாய் வரை நிலையான வசூலை பெற்று வரும் இப்படம், இதுவரை இந்திய அளவில் 177 கோடியும், உலகளவில் 255 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாகும் முன்பே இணையத்தில் லீக்கானது வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ரசிகர்களின் ஆதரவால் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
திரையுலக வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி, 'ஜன நாயகன்' பொங்கல் அன்று வெளியாகியிருந்தால், உலகளவில் 500 கோடி வசூலை எளிதாக கடந்திருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், முன்கூட்டியே லீக்கானதே படத்தின் வசூலை கணிசமாக பாதித்ததாகவும் கருத்துகள் நிலவுகின்றன.
இதற்கிடையில், இந்த வாரம் தமிழில் பெரிய நட்சத்திரங்களின் புதிய படங்கள் வெளியாகாததால், வார இறுதி நாட்களில் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. தற்போதைய நிலவரப்படி, இப்படம் உலகளவில் 300 கோடி வசூலை எட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் திரைப்பயணத்திற்கு நினைவுச்சின்னமாக அமைந்துள்ள இந்த படம், ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது.
Listen News!