மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் நடிகர் மோகன்லால் கூட்டணியில் உருவான ‘திரிஷ்யம்’ தொடர் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக வெளியான திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தன.
இந்நிலையில், நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு தற்போது ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் திரையரங்குகளில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. அதில் ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தின் வாழ்க்கை மீண்டும் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்கிறதா? அல்லது அவர் தனது குடும்பத்தை மீண்டும் பாதுகாக்கிறாரா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் படம் நிறைவடைவதாக கூறப்படுகிறது.
படத்தின் கதை மீண்டும் ஒருமுறை குடும்பம், த்ரில்லர் மற்றும் உணர்ச்சி பூர்வமான அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தின் திருப்பங்கள் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே சுமார் ரூ.22.5 கோடி வசூல் செய்துள்ளது. முன்பதிவுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முதல் நாளிலேயே ரூ.50 கோடியை கடந்த வசூல் பெறும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.
இந்நிலையில், எர்ணாகுளம் கவிதா திரையரங்கிற்கு நடிகர் மோகன்லால் நேரில் தோன்றியதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். அவரின் திடீர் வருகை திரையரங்குகளில் கொண்டாட்ட சூழலை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் ‘திரிஷ்யம் 3’ படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ஆரம்ப வரவேற்பு, தொடரின் வெற்றிப் பயணத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!