நடிகர் விமல் சமீபத்தில் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சென்னையில் நடைபெற்ற வடம் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விமல், மேடையேறி பேசும் போது பல விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்தார். குறிப்பாக, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி குறித்து நினைவுகூர்ந்தார்.

அதாவது, “அந்த சமயத்தில் நான் குற்றாலத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். செய்தி கேட்டவுடன் மிகவும் மனம் உடைந்தது. உடனே தயாரிப்பாளர், இயக்குநரிடம் சென்று நான் செல்ல வேண்டுமென கேட்டேன். ஆனால் படத்திற்காக அதிக பொருட்செலவு செய்யப்பட்டிருந்ததால், அன்றைய படப்பிடிப்பை நிறுத்த முடியாது என்றனர். அது எனக்கு மிகவும் வேதனையான தருணம்,” என்று விமல் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அடுத்த நாளே தயாரிப்பாளருடன் இணைந்து ரோபோ சங்கருக்கு மரியாதை செலுத்தியதாகவும் அவர் கூறினார். “அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தி, கிராம மக்களுக்கு 500 புடவைகள் வழங்கினோம். மேலும், 2000 மரக்கன்றுகள் நட்டு அவரின் நினைவாக ஒரு சமூகப் பணியை செய்தோம்,” என்றும் விமல் கூறியிருந்தார்.
விமல் மற்றும் ரோபோ சங்கர் இணைந்து நடித்த பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இருவருக்கும் இடையேயான நட்பு திரையுலகில் பரவலாக பேசப்பட்ட ஒன்று. அந்த நெருக்கத்தை நினைவுகூர்ந்த விமலின் உரை பலரையும் உருக்கியது.
Listen News!