சினிமா உலகின் பிரபல நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் பெயர்கள் கரன்சி மோசடி தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பொலிஸார் 60 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் இந்த இருவரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரி பொலிஸாரின் தகவலின்படி, கிரிப்டோ கரன்சி மோசடியில் பல்வேறு பிரபலங்கள் தொடர்புடையதாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதாக கூறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகளில் மோசடிக் குற்றச்சாட்டு எதிர்நோக்கும் ஒரு நிறுவனம் முக்கிய ஆதாயம் பெற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணை அதிகாரிகள் கூறியதன்படி, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நேரடியாக இந்த மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லையெனவும், ஆனால் அவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்த மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட பல முதலீட்டாளர்கள் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். கிரிப்டோ மோசடியில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் மற்றும் புகழ்பெற்ற பிரபலங்கள் இதில் தொடர்பு கொண்டதால் அவர்கள் முதலீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த விசாரணை இன்னும் தீவிரமடைந்துள்ளது.
தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோருக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்படலாம் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் விளக்கங்களின் அடிப்படையில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Listen News!