2022ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்ற இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, தற்போது மேலும் ஒரு சர்வதேச கெளரவத்தைப் பெறவிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற மெல்பர்ன் இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியில், அவருக்கு “Leadership in Cinema” (திரைப்படத்தில் தலைமைத்துவம்) என்ற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

ரிஷப் ஷெட்டி, 'காந்தாரா' படத்தில் திரைக்கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த படம் விமர்சகர்களின் பாராட்டுகளையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இதற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். அதன் தொடர்ச்சியாக 'காந்தாரா: அத்தியாயம் 1' படத்தையும் உருவாக்கிய அவர், தற்போது 'ஜெய் ஹனுமான்' என்ற பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில், 36 மொழிகளைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவில் ரிஷப் ஷெட்டி நடுவராகவும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவுக்கு அவர் வழங்கிய பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!