முன்னணி நடிகரும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்தவருமான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘ஜனநாயகன்’. இந்த திரைப்படம், பல காரணங்களால் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இது நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். முன்னதாக, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் மூலம் சமூக அரசியல் சார்ந்த கதைக்களத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஹெச். வினோத். அவருடன் விஜய் இணைந்துள்ள இந்த கூட்டணி, ஆரம்பத்திலிருந்தே கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘ஜனநாயகன்’ படத்தை கே.வி.என் (KVN) நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றி வருகிறார். விஜய் – அனிருத் கூட்டணி என்றாலே பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகின்ற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா என்ற கேள்வி சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இயக்குநர் ஹெச். வினோத், இந்த ரீமேக் சர்ச்சை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அப்போது அவர்,“ஜனநாயகன், பகவந்த் கேசரியின் ரீமேக்கா, அதிலிருந்து சில காட்சிகளை எடுத்து ரீமேக் செய்திருக்கிறார்களா, அல்லது அதில் உள்ள ஒரு காட்சியை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பார்களா – இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதைப் பற்றி படம் பார்க்க வருபவர்கள் கவலைப்பட வேண்டாம் என நினைக்கிறேன். ஏனென்றால், இது ஒரு தளபதி படம். இந்த விஷயத்தில் என்னால் ‘ஆமாம்’ என்றோ ‘இல்லை’ என்றோ சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.
Listen News!