இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு ஆர்.ஜே. பாலாஜி தனது குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தரையில் விழுந்து வணங்கிய அவர், கோவில் கொடிமரத்தையும் தொட்டு வழிபட்டார். பின்னர் பிரகாரங்களை சுற்றி வலம் வந்து பரிவார தெய்வங்களுக்கும் பூஜை செய்தார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, 'கருப்பு' படத்தின் தொடக்க பூஜையே மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றதாகவும், படத்தின் கதைக்கரு மாசாணியம்மனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கோவிலில் நடைபெற்ற ஒரு தரிசன அனுபவமே இந்தக் கதைக்கான ஊக்கமாக அமைந்ததாக அவர் கூறினார்.
மேலும், படம் வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்தாலும், எதிர்பார்த்ததை விட 100 மடங்கு வெற்றி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தன்னை நம்பி வாய்ப்பு அளித்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். தரிசனத்தை முடித்த அவர் குடும்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Listen News!