பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திருமணம் மற்றும் உறவுகள் குறித்து தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் திவ்யா சத்யராஜ், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறிய தனிப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த பேட்டியில் திவ்யா சத்யராஜ், “திருமணம் என்பது எல்லோருக்கும் அவசியம் என்று நான் நினைக்கவில்லை. தாலி கட்டுதல், மோதிரம் மாற்றுதல் போன்ற பாரம்பரிய சடங்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவருக்கொருவர் விருப்பம் இருந்தால் இணைந்து வாழலாம், அதற்காக கட்டாயமாக திருமணம் தேவை இல்லை. மேலும் ஒரே வீட்டில் தான் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடும் அவசியமில்லை. அவரவர் தனித்தனியாக இருந்தாலும் உறவை தொடர முடியும்” என தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை பெறுவது குறித்து பேசும்போது, “திருமணத்திற்குப் பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. திருமணம் இல்லாமலும் குழந்தை பெற முடியும் என்பதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துகளுக்கு அவரது தந்தை சத்யராஜும் ஆதரவாக குரல் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஒரு தரப்பு இதை “தனிப்பட்ட சுதந்திரத்தின் வெளிப்பாடு” என ஆதரிக்க, மற்றொரு தரப்பு பாரம்பரிய மதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் பேரரசு இந்த கருத்துகளுக்கு கடுமையான எதிர்வினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கலாச்சாரம், பண்பாடு எல்லாம் வேண்டாம் என்று சொல்வது சரியல்ல. இந்த நாடு அந்த அடிப்படைகளில்தான் இயங்குகிறது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் அதையே பொதுவாக சொல்லி அனைவருக்கும் வழிகாட்டுவது தவறு.
திருமணம் வேண்டாம், யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது சர்ச்சைக்குரிய உவமையான கருத்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திவ்யா சத்யராஜின் பேட்டி, ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
Listen News!