தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக செயல்பட்டு வருகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சியை கைப்பற்றியமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபலங்கள், நடிகைகள், நடிகர்கள் என பலரும் இணைந்து வருகின்றனர். மேலும், அவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், "நான் அரசியலுக்கு வருவதற்கு அம்மா ஓகே சொல்லிவிட்டார். ரசிகர்களாகிய நீங்கள் நினைப்பதை கமெண்ட்ஸில் சொல்லுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்த கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறுகையில், "நிறைய ரசிகர்கள் எனக்கு கமெண்ட் செய்திருக்கிறார்கள். நான் யாருடைய பக்கம் செல்வேன் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தற்போது நன்றாக இருக்கிறது. கோயில், பள்ளிக்கூடங்களுக்கு அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு பாராட்டுக்கள். அவர்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்.
நாம் புதிய வீட்டிற்கு செல்லும்போது வெளியில் இருந்து பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் உள்ளே சென்ற பிறகுதான் அதில் உள்ள பிரச்சினைகள் தெரியும்.
அதேபோல், ஒரு புதிய ஆள் ஒரு தெருவுக்கு வந்தால் அங்குள்ள தெரு நாய்கள் கூட குரைக்கும். அதற்காக அந்த நாய்களுக்கு பிடித்த பிஸ்கட் போட வேண்டும். சில நாய்களுக்கு பிஸ்கட் பிடிக்காது, பிரியாணிதான் பிடிக்கும். அவற்றுக்கு பிடித்ததை கொடுத்தால்தான் அவை குரைக்காமல் இருக்கும். ஒரு வீட்டை நிர்வகிப்பதே இப்படியென்றால், ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். மாற்றம் வந்துவிட்டது, அதை நேர்மறையாக பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
ராகவா லாரன்ஸின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜயின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் அனைவரையும் அவர் 'தெரு நாய்கள்' என குறிப்பிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசும் தைரியத்தை யார் அவருக்கு கொடுத்தது என்றும், இந்த கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!