சீயான் விக்ரம் நடிப்பிலும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் மீண்டும் ஒரு முறை வெளியீட்டு சிக்கலில் சிக்கியுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த த்ரில்லர் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், படத்தின் நிதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில நிபந்தனைகளுடன் ஜூன் 15, 2026க்குள் படத்தை வெளியிட அனுமதி வழங்கியது. அதன்படி, படத்தின் வருவாயை நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள தனி வங்கிக் கணக்கின் மூலம் கடன்தாரர்களுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கௌதம் மேனன் தற்பொழுது தெரிவித்துள்ளார். இதனால், படத்தின் வெளியீட்டிற்காக மேலும் 30 நாட்கள் அவகாசம் வழங்கி, ஜூலை 15, 2026 வரை காலக்கெடுவை நீட்டிக்குமாறு அவர் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
அதே நேரத்தில், படத்தை வெளியிட அனுமதித்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து முதலீட்டாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பும் நாளை வெளியாக உள்ளது. எனவே ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் எதிர்காலம் மற்றும் அதன் ரிலீஸ் தேதி குறித்து நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதி முடிவை தீர்மானிக்க உள்ளது. இதனால் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Listen News!