தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர் பாவா லட்சுமணன். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் தனது தனித்துவமான குரல், உடல் மொழி மற்றும் இயல்பான நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பெற்றவர். ஆனால் சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தார்.

அண்மையில் அவர் அளித்த உணர்ச்சிபூர்வமான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் தனது வாழ்க்கை போராட்டங்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் குறித்து அவர் கண்ணீருடன் பேசியது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் உருக்கமடையச் செய்தது.
இந்த நிலையில், தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் நடிகர் கூல் சுரேஷ் நேரடியாக பாவா லட்சுமணனின் வீட்டுக்குச் சென்று 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கியுள்ளார்.
எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ச்சியடைந்த பாவா லட்சுமணன், “லெஜண்ட் சரவணன் சாரை நான் நேரில் சந்தித்ததே இல்லை. அவருடைய படங்களிலும் நடித்ததில்லை. இருந்தாலும் என் கஷ்டத்தை உணர்ந்து இந்த கடினமான நேரத்தில் உதவி செய்திருக்கிறார். இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க முடியாது.” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. லெஜண்ட் சரவணனின் இந்த மனிதநேய செயலை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!