இளம் நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘ராம் இன் லீலா’. ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கும் இந்த படத்தில், வர்த்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். ரவிச்சந்திரன் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

காதல், உணர்வுகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘யார் யாரிவள்’ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரிகளை பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதியுள்ளார். மேலும், தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவர்ந்து வரும் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘யார் யாரிவள்’ பாடலின் இசையும், காட்சியமைப்பும் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘ராம் இன் லீலா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!