தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. சந்தன நிறத்தில் வெங்கடகிரி சேலை அணிந்த அவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த சேலை குறித்து சமந்தா உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில், "இந்த சேலை ஒரு அழகான கதையை சுமந்து வருகிறது. வெங்கடகிரி நெசவாளர்களின் தலைமுறை தலைமுறையாக கைவழிவந்த கைவினை மற்றும் பாரம்பரியத்தை இது பிரதிபலிக்கிறது.
சரசா டெக்ஸ்டைல்ஸ் என்ற பிராண்டின் மூலம் இந்த நெசவாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் மரிபெல் அவர்கள் இந்த கலையை உயிரோட்டமாகவும் தொடர்ச்சியாகவும் வாழவைத்து வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரிய நெசவு கலைக்கு சமந்தா வழங்கிய இந்த அங்கீகாரம் நெசவாளர் சமூகத்தினரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் சமந்தா நடித்த "குஷி" படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் அவர் அதிரடியாக களமிறங்கிய படம் "மா இண்டி பங்காரம்".
ஓ பேபி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நந்தி ரெட்டியுடன் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தை சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்" மூலம் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் இணைந்து தயாரித்துள்ளார். நடிகர் திகந்த், கௌதமி, மஞ்சுஷா, ஸ்ரீமுகி உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியானது. ஒரு குடும்பத்தின் திருமண கொண்டாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் பாடலில் பாரம்பரிய ஆடையில் சமந்தா ஆடிய நடனம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
மா இண்டி பங்காரம் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமந்தாவின் இந்த சேலை புகைப்படங்கள் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
Listen News!