பாலிவுட்டில் பிரபல நடிகையாக பரிணமித்து, தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் மனிஷா கொய்ராலா. மணிரத்தினத்தின் 'பம்பாய்' படத்தில் அரவிந்த் சாமியுடன் ஜோடி சேர்ந்து அறிமுகமான இவர், 90களில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் மனிஷா கொய்ராலா, ரஜினிகாந்தோடு நடித்த 'பாபா' படம் குறித்து ஒரு திடுக்கிடும் உண்மையை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவுகள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிஷா கொய்ராலா நடித்த 'பம்பாய்' படம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் சர்ச்சைகள் மற்றும் வரவேற்புகளால் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியன், முதல்வன், பாபா மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து நடித்திருந்தார். இவரது அழகும், இயற்கையான நடிப்பும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அத்தகைய நடிகை மனிஷா சமீபத்திய நேர்காணலில், “நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து கொண்டிருந்தேன். தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு மார்க்கெட் உருவாகி இருந்தது. ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால், 'பாபா' படத்தில் நடித்த பிறகு, வாய்ப்புகள் குறையும் என்ற உணர்வு எனக்குள் இருந்தது." என்றார்.
மேலும், "பின்னாளில் அதுதான் நடந்தது. 'பாபா' படம் தென்னிந்திய சினிமாவில் என்ர திரை வாழ்க்கைக்கு பேரழிவை ஏற்படுத்தியது.” என்று கூறிய இந்த வார்த்தைகள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியதோடு, பலரும் மனிஷாவின் திறமையை சரியான நேரத்தில் நாம் மதிக்கவில்லை என நினைத்துள்ளனர்.
Listen News!