• Oct 26 2024

விசித்ராவுக்கு காட்டுப்பகுதியில் நடந்த பாலியல் சீண்டல்! 20 ஆண்டுகள் சினிமாவில் கம்பேக் கொடுக்காததற்கு இது தான் காரணமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது பேசிய விசித்ரா,  ' 2001 ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த பட ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஓட்டல் அறையில் தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தேன். முதல்முறையாக அந்த ஹீரோவிடம் என்னை அறிமுகம் செய்ய சென்றபோது, அவர் பெயரை கூட கேட்காமல், நைட்டு ரூமுக்கு வந்திரு என சொன்னார்.

ஆனால் அந்த ஹீரோ அழைத்தும் ரூமுக்கு நான் செல்லவில்லை. இதனால் இரவில் ஆட்களை விட்டு ஓட்டல் அறையை தட்டி சிலர் ரகளை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தவரிடம் இதுபற்றி சொன்னதும்.


அவர் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு அறையில் தங்க வைத்து, அந்த ஹீரோவின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வைத்தார். எனக்கு அப்போது தெரியாது அந்த ஓட்டல் ஊழியரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று எல்லாம். நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் எனக்கு தெரியாமல் என்னை அழிக்க படக்குழு பிளான் செய்கிறார்கள் என தெரியவில்லை.

ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்ற போது, பைட்டர்கள் மற்றும் ஜுனியர் ஆர்டிஸ்டுகளுடன் ஒரு கலவர காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஆக்‌ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறான இடங்களில் தொட்டார்.

இதையடுத்து அந்த ஷாட் ரீ-டேக் எடுக்கப்பட்டது. அப்போது மீண்டும் அதேபோல செய்தார். பின்னர் மூன்றாவது டேக் எடுத்த போது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன். உடனே அவனது கையை பிடித்து இழுத்து சென்று ஸ்டண்ட் மாஸ்டரிடம் நிறுத்தினேன்.


அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் எனது கன்னத்தில் ஓங்கி அரைந்துவிட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அவர் அடித்ததை அங்கிருந்த யாரும் தட்டிக்கேட்கவில்லை. எல்லாரும் பார்க்கிறார்கள். நான் அங்கு நிற்கவில்லை. என் நண்பரை அழைத்த போது அவர் தான் புகார் கொடுக்க சொன்னார்.

இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை என்பதால் தான் சினிமாவை விட்டே விலகி இருந்தேன். அந்த ரணத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அதற்கு தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை.

விசித்ரா சொன்ன இந்த சம்பவம் 2001 ஆம் ஆண்டு பலேவடிவி பாசு என்கிற தெலுங்கு படத்தில் நடித்தபோது நடந்து இருக்கிறது. அப்படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். ஸ்டண்ட் மாஸ்டராக ஏ.விஜய் பணியாற்றினார் என நெட்டிசன்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.


Advertisement