நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி சமீபத்தில் மாணவர்களுக்காக வழங்கிய ஒரு அறிவுரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கல்வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இன்றைய தலைமுறையினர் அதிக நேரத்தை மொபைல் போன்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செலவிடுவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அப்போது பேசிய சமுத்திரக்கனி, “வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலர் விரதம் இருப்பது போல, மாதத்திற்கு ஒரு நாளாவது மொபைல் போன்களை முழுமையாக பயன்படுத்தாமல் டிஜிட்டல் விரதம் இருக்க வேண்டும். அந்த ஒரு நாள் குடும்பத்தினருடன் பேசுங்கள், புத்தகங்கள் படியுங்கள், இயற்கையை ரசியுங்கள். தொடர்ந்து மொபைல் திரைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது மன அமைதியையும் உடல்நலத்தையும் பாதிக்கிறது.” என்று கூறினார்.
மேலும், “இந்த டிஜிட்டல் விரதத்தை கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் முகத்தில் புத்துணர்ச்சி தெரியும், மனதில் தெளிவு கிடைக்கும். வாழ்க்கையில் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்...” என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சமுத்திரக்கனியின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் மனநலம் மற்றும் கவனச்சிதறலை குறைக்க இதுபோன்ற பழக்கங்கள் அவசியம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த ‘டிஜிட்டல் விரதம்’ குறித்த பேச்சு தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!