தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவராகத் திகழும் சின்மயி ஸ்ரீபதா, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளிலும் தடைகளிலும் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கெதிராக தொடரப்பட்ட தடை வழக்கின் மற்றொரு கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
பாடல்களிலும், டப்பிங் கலைஞராகவும் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்த சின்மயி, கடந்த சில ஆண்டுகளாக வைரமுத்து சர்ச்சை, டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம் போன்ற எதிர்ப்பாராத சங்கடங்களில் சிக்கிக்கொண்டார். இதனால், அவர் மீது தொழில்துறை சார்பாக அளிக்கப்பட்ட தவறான தடைகள் பலருக்கும் பரிதாபமாக அமைந்திருந்தது.
2018-ல் MeToo இயக்கத்தின் போது, எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது சின்மயி எச்சரிக்கை குரலெழுப்பியதிலிருந்து, இத்தகைய தாக்கங்கள் உருவாகத் தொடங்கின. தன்னை ஒரு பாதிக்கப்பட்ட பெண் என வெளிப்படையாகக் கூறிய சின்மயி, தனக்குத் தகுந்த நீதியை எதிர்பார்த்திருந்தாலும், அதற்கு எதிரான சினிமா தொழில்நுட்ப சங்கங்களின் நடவடிக்கைகள் அவரை டப்பிங், பாடல் வாய்ப்புகள் ஆகியவற்றிலிருந்து விலக்கி விட்டன.
அதையடுத்து, நடிகர் ராதாரவியின் தலைமையிலான டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டதாகவும், அதற்கெதிராக அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று (ஜூன் 5, 2025) இந்த வழக்கின் மற்றொரு முக்கியமான விசாரணை நடைபெறவிருக்கிறது. இதைப் பற்றி சின்மயி, தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில் சில கருத்துகளை நேற்று பதிவிட்டுள்ளார்.
"நாளை என் தடை வழக்கின் மற்றொரு விசாரணைக்கு நான் செல்கிறேன். முடிந்தால் எனக்காக ஒரு பிரார்த்தனையை அனுப்புங்கள். நன்றி." என்றார். இந்தப் பதிவு வைரலாகி, இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் ரசிகர்கள் எனப் பலரிடமும் உணர்வுபூர்வமான ஆதரவை பெற்றுள்ளது.
தடைகள், சங்கடங்கள் எல்லாவற்றையுமே தாண்டி, பாடகி சின்மயி சமீபத்தில் மீண்டும் ஒரு பெரிய முயற்சியில் 'தக் லைஃப்' படத்தின் இசைவெளியீட்டில் "முத்தமழை" பாடலை பாடியுள்ளார்.
இந்த படம், மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்களுடன், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகியது. இதில் இடம்பெற்ற "முத்தமழை" பாடலை தீ பாடியிருந்தாலும், இசைவெளியீட்டு விழாவில் சின்மயி நேரில் அந்தப் பாடலை பாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சின்மயிக்கு எதிராக தொடரப்படும் வழக்கின் இன்றைய விசாரணை, தனியொரு கலைஞரின் உரிமையை தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள். அதே நேரத்தில், 'தக் லைஃப்' படத்தில் "முத்தமழை" பாடலால் மீண்டும் ரசிகர்களின் இதயத்தை சின்மயி தொட்டுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!