விஜயின் இறுதி படம் என சொல்லப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான சென்சார் பிரச்சினைகளால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்தப் படம் முழுமையாக இணையதளத்தில் வெளியானது. இது பட குழுவினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்னர் படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் ஃப்ரீலான்ஸ் எடிட்டரான உமாசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் அவர், ஜனநாயகன் படத்தை யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை என்றும், யாருடனும் பகிரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

படம் இணையத்தில் வெளியானதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்ஜாமின் கோரிய எடிட்டரின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்த ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம், முன்ஜாமின் வழங்குவதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், படம் இணையதளத்தில் வெளியான பிறகு எடிட்டர் இதய நோய் என கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவன தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கினை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Listen News!